மு.க. ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: மனு வாபஸ், வழக்கு தள்ளுபடி
கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாகக் கூறி விசாரணை நடத்தக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டது.
தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் சிவஞானசம்பந்தம் தாக்கல் செய்த மனுவில், மு.க. ஸ்டாலின் தனது வேட்புமனுவில் திமுக அறக்கட்டளையின் நிர்வாகியாக இருப்பதையும், அறக்கட்டளைக்காக ரூ.2.27 கோடிக்கு நிலம் வாங்கிய விவரத்தையும் குறிப்பிடவில்லை எனக் கூறி, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியிருந்தார்.

வழக்கு விசாரணை
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வேட்புமனுவில் தனிப்பட்ட சொத்து விவரங்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும்; அறக்கட்டளை சொத்துகள் தனிப்பட்ட சொத்துகளாகக் கருத முடியாது.
மேலும், அந்த சொத்துகளுடன் தனிப்பட்ட தொடர்பு இருப்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் இல்லை என்பதால் நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, மனுதாரர் சிவஞானசம்பந்தம் தனது மனுவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.