கங்கனாவின் பத்மஸ்ரீ விருதை திருப்பி வாங்குங்கள் - சீக்கிய அமைப்பினர் குடியரசு தலைவருக்கு கடிதம்
நடிகை கங்கனாவின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெறக் கோரி டெல்லி சீக்கிய அமைப்பினர் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்திய சினிமா நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத், எப்போதும் தனது சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிடும் கருத்து சர்ச்சையினை ஏற்படுத்தும்.
அந்த வகையில் மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது தொடர்பாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதனை இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் வெளிப்படுத்தினார்.

அதில்,ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மாற்றாக வீதிகளில் இருப்பவர்கள் சட்டங்களை இயற்ற தொடங்கியுள்ளனர். அப்படியிருக்கும் சூழலில் இதுவும் ஒரு ஜிகாதி தேசம் தான். இதை இப்படி விரும்பிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
நடிகை கங்கனாவின் இந்த கருத்துவிவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் விவசாயிகள், சீக்கியர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக கங்கனாவின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெறக் கோரி டெல்லி சீக்கிய அமைப்பினர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
விவசாயிகள், சீக்கியர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதித்ததாகவும், 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை குறிப்பிட்டு கங்கனா வேண்டுமென்றே சீக்கியர்களை தூண்டி விடுவதாகவும் அக்கடிதத்தில் விவசாயிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.