எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாள் முதலே கடும் அமளியாகவே சென்று கொண்டிருக்கிறது.
மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் சமீபத்தில் வாபஸ் பெறப்பட்டது குறித்து முதல் நாளில் இருந்தே அமளி நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் பெரும் சர்சையையும் கண்டனங்களையும் எதிர்கொண்ட இந்த சட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திரும்பப்பெறுவதாக அறிவித்திருந்ததற்கு எதிர்கட்சிகள் ஒருமித்த ஆதரவு அளித்து இருந்தாலும் இதற்கான மசோதா விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுப்பட்டது எதிர்கட்சிகள்.
மேலும் குறைந்த பட்ச ஆதார விலை பற்றி பாஜக அரசு எதுவும் பேசவில்லை என்றும் புகார் வைத்துள்ளன.
கடந்த மூன்று நாட்களாகவே இதற்காக அவையில் அமளியில் ஈடுப்பட்டு வரும் எதிர்க்கட்சியினர் கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது அமளியில் ஈடுப்பட்டதற்காக இந்த கூட்டத்தொடரில் 12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை நீக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து நேற்று அமளியில் ஈடுப்பட்டன.
இதனால் இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஸ்தம்பித்து போன நிலையில் அமளிக்கு இடையில் இன்று மீண்டும் அவை கூட உள்ளது.
நேற்று குழந்தை பிறப்பு தொழில்நுட்பம், பாதுகாப்பு, நடவடிக்கைகள் தொடர்பான மசோதா ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தாக்கல் செய்திருந்தார்.
இதனிடையெ இன்று ராஜ்ய சபாவில் ஓபிசி பிரிவினரின் வேலைவாய்ப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.