மீண்டும் திருவள்ளுவருக்கு காவி உடை - தவெக அரசு எதிர்வினையாற்றுமா?
ஆளுநர் மாளிகை நிகழ்வில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுவருக்கு காவி உடை
தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ புகைப்படங்களில் திருவள்ளுவர் வெள்ளை உடையுடன், ஒரு கையில் எழுத்தாணி, மற்றொரு கையில் ஓலைச்சுவடியுடன் அமர்ந்திருப்பார்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பாஜக ஆதரவாளர்கள் சிலர், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அதே போல், இதற்கு முன்னதாக தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியும் காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படங்களை பயன்படுத்தி வந்தார்.
திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து மத சாயம் பூசக்கூடாது என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
இந்நிலையில், மீண்டும் தமிழ்நாடு ஆளுநர் காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விழாவில், காவி உடை அணிந்த நெற்றியில் விபூதி, கழுத்தில் ருத்திராட்சை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்திற்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதற்கு முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு எதிர்வினையாற்றுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முதலமைச்சராக விஜய் பதவியேற்றது, அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்ட நிகழ்வுகளில், தொடர்ச்சியாக தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்ட நிலையில், தமிழ்தாய் வாழ்த்தை முதலாவதாக பாட வேண்டும் என்பது குறித்து பிரதமருடனான சந்திப்பில் முதல்வர் விஜய் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.