இடைத்தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறக்கப்படும் சீமான்?
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானை பொது வேட்பாளராக களமிறக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இடைத்தேர்தலில் பொதுவேட்பாளராக சீமான்?
தமிழக முதல்வர் விஜய் ராஜினாமா செய்துள்ள திருச்சி கிழக்கு மற்றும் அதிமுகவில் இருந்து விலகிய 5 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ள 5 தொகுதிகள் என மொத்தம் 6 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

யாரும் எதிர்பாராத வெற்றியை பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை, எப்படியாவது இடைத்தேர்தலில் வீழ்த்த வேண்டுமென திமுக மற்றும் அதிமுக திட்டமிட்டு வருகிறது.
சட்டமன்ற தேர்தலில் தனித்து வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு தற்போது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு வழங்குகின்றன.
இந்த கட்சிகள் இடைத்தேர்தலிலும் தவெகவிற்கு ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மேலும் கட்சிகள் ஆதரவு வழங்கினால் அது கூடுதல் பலமாக அமையும்.
இதனால் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்து திமுக பரிசீலித்து வருகிறது.
குறிப்பாக அம்பாசமுத்திரத்தில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா பதவியை ராஜினாமா செய்து தவெக இணைந்துள்ள நிலையில், 2வது இடம் பிடித்த காங்கிரஸ் வேட்பாளர், 3வது இடம் பிடித்த தவெக வேட்பாளர் என மூவரும் ஒரே அணியில் உள்ளனர்.

இங்கு நாம் தமிழர் சார்பில் போட்டியிட்ட நத்தம் சிவசங்கரன் 14,906 வாக்குகள் பெற்றார்.
இதனால் இந்த தொகுதியில் பொதுவேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை களமிறக்கலாம் என திமுக ஆலோசித்து வருகிறது.

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டால் 6 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இதற்கு ஒப்புக்கொள்ளாத சீமான், மக்களை நம்பி நாம் தனித்தே நிற்கலாம் என கட்சியின் மூத்த தலைவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சீமானை சட்டமன்றத்திற்கு அனுப்பி பார்க்க ஆசைப்படும் சீமானின் தம்பிகள், இத்தனை காலமாக எதிர்த்து அரசியல் செய்த திராவிட கட்சிகளின் ஆதரவில் சட்டமன்றத்திற்கு அனுப்ப சம்மதிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.