நிறைவேறுமா தோனியின் ஆசை - உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
14 ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் முதலாவதாக இறுதிப் போட்டிக்குள் நுழையப் போவது யார் என்பதை தீர்மானிக்கவுள்ள QUALIFIER ONE போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் இன்று மோதவுள்ளன.
இவ்விரு அணிகளின் பலம், பலவீனம் என்ன பார்க்கலாம். 13 ஆவது சீசன் ஐபிஎல்லில் ரசிகர்கள் எதிர்பாரா வகையில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே, அந்த சீசனின் கடைசி ஆட்டம் முடிந்தவுடன் அணித்தலைவன் தோனி சூளுரைத்தது போலவே 14 ஆவது சீசனில் ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டெழுந்தது.
பேட்டிங் வரிசையில் சில மாற்றங்களை மேற்கொண்ட சிஎஸ்கே, முதல் போட்டியில் இருந்தே பிளே ஆஃப்க்கான முனைப்புடன் விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. இருப்பினும் லீக்கில் கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் சிஎஸ்கே தோல்வியடைந்துள்ளது.
அணியின் பேட்டிங் வரிசையில் ருதுராஜ், டூபிளசி, ராயுடு ஆகியோர் தூண்களாக வலுசேர்க்கின்றனர். ருதுராஜ் பவுண்சர் பந்துகளை திறம்பட எதிர்கொள்ள திணறுவது சிறு பின்னடைவாக உள்ளது. இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் ஜொலித்த மொயின் அலி அமீரக மண்ணில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
மத்திய வரிசையில் கேப்டன் தோனி வழக்கமான அதிரடியை வெளிப்படுத்த திணறுவது கூடுதல் ரணம். ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா மற்றும் பிராவோவின் அதிரடிகள் பேட்டிங்கிற்கு ஆறுதல். பந்து வீச்சில் பவர் பிளே அஸ்திரமாக பார்க்கப்படும் தீபக் சாஹர், ஹேசல்வுட் ஆகியோர் ஃபார்மை இழந்துள்ளது அணிக்கு சிக்கல்.
இருப்பினும் பிராவோ, ஷர்தூல் தாக்கூரின் உத்திகள் பலம். ரெய்னாவுக்கு மாற்றாக களமிறக்கப்படும் உத்தப்பா ரன் சேர்க்க திணறி வரும் நிலையில் ஜெகதீசனுக்கு வாய்பளிப்பது கைகொடுக்கும் என நம்பப்படுகிறது. ஆல்ரவுண்டர் மொயின் அலிக்கு மாற்றாக சமீபத்தில் அணியில் இணைந்த ட்ரேக்ஸும் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லீக் சுற்றில் சிஎஸ்கேவை எதிர்கொண்ட இரு போட்டிகளிலும் டெல்லி அணி வெற்றியை ருசித்துள்ளது. இந்நிலையில் QUALIFIER சுற்றில் தோனியின் புதிய வியூகங்களை ரிஷப் பந்த் தகர்த்து மீண்டும் கோலோச்சுவாரா என்பது போட்டியின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.