கண்களை பிடுங்கி, கைகளை வெட்டுவேன்" – மிரட்டல் விடுத்த பாஜக எம்.பி
ஹரியானாவில் உள்ள கோயிலில் பாஜக தலைவர்களில் ஒருவரான மணீஷ் குரோவரை விவசாயிகளால் முற்றுகையிடப்பட்டார்.
இதற்காக ஹரியானா பாஜக எம்பி அரவிந்த் சர்மா விவசாயிகளை மிரட்டும் விதமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்
பாஜக தலைவரான மணீஷ் குரோவரை எதிர்க்கும் எவருடைய கண்களையும் பிடுங்குவேன், கைகளை வெட்டுவேன் என்று ஒரு பொது நிகழ்வில் ஹரியானா ரோஹ்தக் தொகுதி எம்பி அரவிந்த் சர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று ஹரியானா, ரோஹ்தக் மாவட்டத்தின் கிலோய் கிராமத்தில் உள்ள கோயிலுக்குள் பாஜகவின் மணிஷ் குரோவர் இருந்தபோது, கோபமடைந்த விவசாயிகள் அவரை முற்றுகையிட்டனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை "வேலையில்லா குடிகாரர்கள்" என்றும், "மோசமான சக்திகள்" என்றும் மணீஷ் குரோவர் கூறியிருந்த கருத்து விவசாயிகள் மத்தியில் அனலை கிளப்பியது.
இதனால் விவசாயிகள் செய்த முற்றுகையில் பாஜக தலைவரும் மற்றவர்களும் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் கோயிலுக்குள் சிக்கிக் கொண்டனர்.
அதன் பிறகு குரோவர் கூப்பிய கைகளுடன் வெளியே வந்தார். இதன் பின்னரே பிணைக் கைதிகளாக இருந்தவர்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.