ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை; நெஞ்சுரத்தோடு சட்டப்படி எதிர்கொள்வேன் - சி.விஜயபாஸ்கர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் என்னை பற்றி குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றும் இதனை நெஞ்சுரத்தோடு சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்படி எதிர்கொள்வேன்
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், "புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எங்களுக்கு தெய்வம். எங்களுடைய கடவுள்.
ஆறுமுகசாமி ஆணையம் என்னை பற்றி குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. ஒருதலைபட்சமானது.

இது அரசியல் உள்நோக்கு கொண்ட கருத்து என்று ஆணித்தரமாக சொல்கிறேன். எங்களைப் பொறுத்தவரை அம்மாவை இழந்து தவிக்க கூடிய இந்த நேரத்தில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற கருத்துக்களாக இருக்கின்றன.
இருந்தாலும் பொது வாழ்க்கையில் இருக்கக்கூடிய நாங்கள் இதை சட்ட வல்லுநர்களோடு கலந்து சட்டப்படி நேர்மையோடு, முறையாக, நெஞ்சுரத்தோடு இதை எதிர்கொள்வேன்" என்றார்.
ஆனால் ஆறுமுகசாமி அறிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமி இதுவரை வாய்திறக்கவில்லை என்பது நினைவில் கொள்ளத்தக்கது.