மத்திய அமைச்சருடன் அதிமுக MLA'க்கள் சந்திப்பு - கூட்டணி தொடரும் என கூறும் பாஜக...சூழ்நிலை மாறுகிறதா..?
தமிழக அரசியலில் தற்போது பெரும் கேள்விகளை நாளுக்கு நாள் அதிமுக பாஜக கூட்டணி எழுப்பி வருகின்றது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதலில் ஜெயலலிதா அடுத்து அண்ணா அதனை தொடர்ந்து பெரியார் என அதிமுகவின் சித்தாந்த ரீதியிலான தலைவர்களை விமர்சிக்க துவங்கியது முதல் கூட்டணியில் சலசலப்புகள் ஏற்பட துவங்கி தற்போது முற்றிலுமாக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி இருக்கின்றது.
அதிமுகவின் கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் தேர்தலை சந்திப்பது பாஜகவிற்கு பெரும் சவாலான ஒன்றே. இந்த சூழலில் கூட்டணி குறித்து மீண்டும் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இதற்கிடையில் தான் இன்று பாஜகவின் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தமிழக மாநில துணை தலைவர் விபி துரைசாமி, அதிமுக பாஜக கூட்டணி தொடரவேண்டும் என கூறி, அது குறித்து பேசப்பட்டு வருவதாகவும் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
நேற்று தொண்டர்கள் எடுத்த முடிவு தான் பாஜகவுடன் கூட்டணி முறிவிற்கு காரணம் என அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில், அதிமுக முற்றிலுமாக பாஜகவிடமிருந்து விலகி செல்லும் என நம்பப்படுகிறது.
ஆனால் இன்று அதிமுகவின் 3 எம்.எல்.ஏ'க்கள் கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளனர். சந்தித்தவர்கள் கோவை நீலகிரி பகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் என்று கருத்தில் கொண்டு இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என கூறினாலும், இரு அரசியல் கட்சிகள் - அதுவும் கூட்டணி தொடர்பான சர்ச்சையில் நீடிக்கும் கட்சிகள் சந்திக்கும் போது அரசியல் பேசாமலா இருந்திருப்பார்கள் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. இன்று இது சந்திப்பு குறித்து பேசும் போது அதிமுக எம்.எல்.ஏ'க்கள் இது வெறும் சம்பிரதாயமான சந்திப்பு தான் என்று விளக்கமளித்து சென்றனர்.
இதே நேரத்தில் தான் இன்று தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இங்கு இல்லாத போதிலும் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தமிழக மாநில பொறுப்பாளர் கேசவ விநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக பாஜக மாநில துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உட்பட கட்சியின் மூத்த பொறுப்பாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
அண்ணமாலை தாமாக முன்வந்து தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தேசிய தலைமையிடம் சந்தித்த போது கூறிய நிலையிலும் அவருக்கு தங்களது ஆதரவை அளிக்கும் முடிவில் இருக்கும் பாஜக தேசிய தலைமை அதே நேரத்தில் அதிமுகாவுடனான கூட்டணியை கைவிடும் எண்ணத்தில் தேசிய தலைமை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த விஷயங்களின் முன்னேற்றத்தின் காரணமாக அண்ணாமலை அதிமுக - இருதரப்பிற்கு இடையில் இருக்கும் பிரச்சனை சுமுகமாக பேசி தீர்க்கப்பட்டு, மீண்டும் கூட்டணி சேருமா? அல்லது எடுத்த முடிவில் ஆணித்தரமாக அதிமுக நிற்குமா? என்பதெல்லாம் வரும் நாட்களில் தான் தெரியும்.
ஆனால், அவ்வாறு மீண்டும் கூட்டணி அமைந்தால், அதிமுகவின் வாக்குகள் எந்தளவிற்கு இருக்கும் என்பதில் பல கேள்விகள் எழலாம். தொண்டர்களின் முடிவு தான் இது என எடப்பாடி கூறும் நிலையில், மீண்டும் கூட்டணி அமைத்தால் அதற்கான விளைவுகளையும் அதிமுக மற்றும் பாஜக இருகூட்டணியும் சேர்ந்தே தான் சந்திக்க நேரிடும்.