மிளகாய்ப்பொடி தூவி கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி - அதிர்ச்சியில் பொதுமக்கள்
கிருஷ்ணகிரி அருகே மிளகாய்ப்பொடி தூவி கணவனை மனைவி தீர்த்துக் கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பணந்தூர் இந்திரா நகரை சேர்ந்த நரேஷ்குமார் என்பவர் மேற்குவங்கத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
ஏற்கனவே கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழும் கணவன், மனைவிக்குள் கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ராணுவத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்த நரேஷ்குமார் நேற்று முன்தினம் மதுபோதையில் தனியாக வசித்து வரும் சசிகலாவின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
குடும்பம் நடத்த வருமாறு சசிகலாவை அழைக்கவே அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அது முற்றிய நிலையில் கோபமான சசிகலா மிளகாய் பொடியை எடுத்து நரேஷ்குமாரின் கண்களில் தூவி அவரை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த நரேஷ்குமாரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதேசமயம் சசிகலாவும், நரேஷ்குமார் தன்னை தாக்கியதில் காயமடைந்ததாக கூறி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நரேஷ்குமார் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இதனை கேள்விப்பட்ட மருத்துவமனையில் இருந்த சசிகலாவும் மாயமாகிவிட அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.