குழந்தைகளின் கண் முன்னே தாயை கொலை செய்து அடுப்பில் வேக வைத்த கொடூர தந்தை - நடுங்க வைக்கும் சம்பவம்
அடுப்பில் வேக வைத்த கொடூரன்
பாகிஸ்தான், கராச்சியைச் சேர்ந்தவர் ஆஷிக். இவருடைய மனைவி நர்கீஸ். இத்தம்பதிக்கு 6 குழந்தைகள் உள்ளனர். தனியார் பள்ளி ஒன்றில் காவலாளியாக ஆஷிக் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் ஆஷிக் மற்றும் நர்கீஸ் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டை முற்றி கைகலப்பானது. இதில், ஆத்திரமடைந்த ஆஷிக் தலையணையால் மனைவி நர்கீஸின் முகத்தில் வைத்து கொலை செய்தார். பிறகு, மனைவியின் உடலை தான் வேலை செய்யும் பள்ளிக்கு கொண்டு சென்று சமையலறையில் உள்ள ஒரு பெரிய பானையில் போட்டு, அடுப்பில் வேக வைத்திருக்கிறார்.
அதிர்ச்சி அடைந்த குழந்தைகள்
இதைப் பார்த்த 6 குழந்தைகளும் பயத்தில் நடுங்கிப்போய் நின்றிருக்கின்றன. இதில், ஒரு குழந்தை மட்டும் அங்கிருந்து தப்பிச் சென்று நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தது. அங்கிருந்து தப்பிச் சென்ற ஆஷிக், 3 குழந்தைகளை மட்டும் தன் உடன் அழைத்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார்
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அடுப்பில் இருந்த நர்கீஸ் உடலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த அடுப்பிலிருந்து நர்கீஸை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவான ஆஷிக்கை தேடி வருகின்றனர். மனைவியை குழந்தைகள் கண்முன்னே கொலை செய்து அடுப்பில் வேக வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.