திருமணத்துக்கு முதல் நாள் இரவு காதலியுடன் ஓட்டமெடுத்த மணமகன்: அதிர்ச்சியில் பெண் வீட்டார்

india karnataka
By Luxshan Jan 05, 2021 08:59 PM GMT
Report

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பைதி பைந்தூர்நாலா கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். இவருக்கும் சிருங்கேரியைச் சேர்ந்த சிந்து என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

இவர்களின் திருமணம் சிருங்கேரியில் நேற்று நடைபெறவிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

திருமண வரவேற்பு முடிந்து அனைவரும் ஓய்வு எடுக்க அவரவர் அறைக்குச் சென்று விட்டார்கள். அதே போன்று மணமகன் நவீன் தனது அறைக்கு ஓய்வு எடுக்கச் சென்றுள்ளார்.

அப்போது திடீரென அவரை பார்க்க வந்த இளம் பெண்ணைக் கண்டு, நவீன் அதிர்ச்சியடைந்தார். அதன் பின் விசாரித்த போது, அந்த பெண் அவரின் முன்னாள் காதலி என்பது தெரியவந்தது.

மேலும், அந்த பெண் மாப்பிள்ளை நவீனைப் பார்த்து, என்னைக் காதலித்து விட்டு எப்படி வேறொரு பெண்ணை உன்னால் திருமணம் செய்ய முடியும் எனக் கேட்டுள்ளார். அதோடு என்னை ஏமாற்றிவிட்டு திருமணம் செய்துகொண்டால், நாளை காலை மண்டபத்துக்கு வந்து அனைவர் முன்னிலையிலும் உண்மையைக் கூறி திருமணத்தை நிறுத்திவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் நவீன், உறவினர்கள் மற்றும் பெற்றோருக்கு பயந்து, வந்த அவரின் காதலியுடன் இரவோடு இரவாக திருமண மண்டபத்தில் இருந்து ஓட்டம் பிடித்துவிட்டார்.

ஆனால், இது தெரியாமல் மறுநாள் காலை உறவினர்கள் மற்றும் பெற்றோர் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்து வர, தாலி கட்டும் நேரத்தில் நவீன் மணமேடைக்கு வாரமல் போன பின்னரே, அவர் அறைக்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது தான் அனைவருக்கும் உண்மை தெரியவர, திருமணம் நின்று போனது. இருப்பினும் அந்த நேரத்தில்,

திருமணத்துக்கு வந்திருந்த சிருங்கேரி தாலுகா நந்திக் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு என்பவர் சிந்துவைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி முன்வந்தார்.

இதனால் பெண் வீட்டார் இதற்கு சம்மதம் தெரிவிக்க,அதே முகூர்த்தத்தில் மணப்பெண் சிந்துவை, சந்துரு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு வந்த அனைவரும் மணமக்களை வாழ்த்திச் சென்றதுடன், சந்துருவின் இந்த பெருந்தன்மை பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது