பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலக காரணம் இதுதான்..!
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதற்கான காரணத்தை விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கும் நிலையில் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு தலா 5 அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் பெங்களூரு அணியில் ஐபிஎல் ஆரம்பித்த காலத்தில் இருந்தே விளையாடி வரும் விராட் கோலி கடந்த 7 ஆண்டுகளாக கேப்டனாகவும் பதவி வகித்து வந்தார். ஆனால் அவரால் ஐபிஎல் கோப்பையை வெல்லவே முடியவில்லை. இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக கடந்தாண்டு சீசனுடன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.
இதனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தான் ஏன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினேன் என விராட் கோலி கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், மற்றவர்களைப் போல் என்னால் முடியவில்லை என்பது தெரிந்தும் அதை தொடர மாட்டேன் என்பதால் பதவி விலகியதாக கூறியுள்ளார். மேலும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதை ரசித்து செய்ய வேண்டும். நான் எடுத்த முடிவை சிலர் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.எனக்கு தற்பொழுது ஒரு இடைவேளை தேவைப்படுகிறது.
எனது வேலைப்பளு குறைப்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று விராட் கோலி கூறியுள்ளார்