பாஜக என்ன தீண்ட தகாத கட்சியா?..கூட்டணி வைக்கக்கூடாதா? இபிஎஸ் கேள்வி
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தும் கொடநாடு சம்பவத்தை மட்டும் திட்டமிட்டு பேசுகிறார்கள் என செய்தியாளர்களை சந்தித்த போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொடநாடு விவகாரம் பற்றி பேசுவது ஏன்?
இன்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, கொடநாடு சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜரானது திமுகவின் வழக்கறிஞர்கள் தான் என குற்றம்சாட்டி, நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போதும், கொடநாடு சம்பவத்தை மட்டும் திட்டமிட்டு பேசுகிறார்கள் என்று கண்டனம் தெரிவித்தார்.
கொடநாடு விவகாரம் குறித்து தான் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது ஏன் பதிலளிக்கவில்லை என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், கொடநாடு வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்தது அதிமுக தான் என சுட்டிக்காட்டிய அவர், அந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தது திமுக தான் என குற்றம்சாட்டினார்.
பாஜக தீண்டத்தகாத கட்சியா?
90% வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியது ஏன் என்றும் வினவியுள்ள அவர், காவிரி விவகாரத்தில் அதிமுக தான் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கியது என கூறினார்.
பாஜவுடனான கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா? என வினவி, கடந்த 1999-ஆம் ஆண்டு இதே திமுக அப்போது பாஜகவுடன் கூட்டணியில் தான் இருந்தது என தெரிவித்தார்.