கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டது ஏன்..? மும்பை அணி பயிற்சியாளர் விளக்கம்!
கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் விளக்கம் அளித்துள்ளார்.
ரோஹித் ஷர்மா
2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான வீரர்களின் ஏலமும் கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்றது. இதற்கிடையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டார்.
மேலும், குஜராத் அணியிலிருந்து, மும்பை அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது பெரும் பேசுருளாகி, ரோஹித் ஷர்மா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது "இது முழுக்க முழுக்க கிரிக்கெட்டை வைத்து எடுக்கப்பட்ட முடிவு. ஹர்திக் பாண்ட்யாவை முதலில் ஒரு வீரராக நாங்கள் வாங்க நினைத்தோம்.
தற்போது அணி மாற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் தான் நாங்கள் இருக்கிறோம். இந்தியாவில் பல ரசிகர்கள் இதனை ஏற்றுக் கொள்ளாமல் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக இந்த உணர்ச்சிவசத்தை எல்லாம் தள்ளி வைத்துப் பார்த்தால் இதற்கு பின்னால் இருக்கும் கிரிக்கெட் தொடர்பான முடிவை ஏன் நாங்கள் எடுத்தோம் என்று உங்களுக்கு கண்டிப்பாக புரியும்.
நீக்கப்பட்டது ஏன்..?
தற்போது கேப்டனாக இல்லாமல் வெறும் ஒரு வீரராக ரோஹித் ஷர்மா விளையாடினால் அவரின் பல திறமைகள் பேட்டிங்கில் நிச்சயம் வெளிப்படும். ரோஹித் தற்போது களத்திற்கு சென்று எந்த நெருக்கடியும் இல்லாமல் மகிழ்ச்சியாக ரன்களை சேர்க்க வேண்டும்.
அதுதான் முக்கியம். ரோஹித் ஷர்மா ஒரு மிக சிறந்த நபர். அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல ஆண்டு காலம் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து இருக்கிறார். மேலும் அவர் இந்திய அணிக்காக அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் தலைமை தாங்குகிறார். அவர் எங்கு சென்றாலும் அவரை கேமரா பின் தொடர்ந்து வருகிறது. அந்த அளவுக்கு அவர் பிசியாக இருக்கிறார்.
கடந்த இரண்டு சீசன்களாக அவர் போட்டிகளில் சரியாக ஜொலிக்கவில்லை. ஆனால் கேப்டனாக நன்றாகவே செயல்பட்டு இருக்கிறார். இதனால்தான் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் இணைந்து ரோஹித் ஷர்மாவை சாதாரண வீரராக களமிறக்கினால் அது பேட்டிங்கில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்பாக இருக்கும் என்று எண்ணினோம்.
ரோஹித் ஷர்மா ஒரு பேட்ஸ்மனாக எங்களது அணிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுப்பார். கேப்டன் என்ற எந்த நெருக்கடியும் இல்லாமல் அவர் களத்தில் சாதாரண வீரராக விளையாடி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்" என்று தெரிவித்துள்ளார்.