எனது இறுதிச் சடங்கில் அரசு மரியாதை வேண்டாம்; மக்களின் அன்பு போதும் - உம்மன் சாண்டி!
முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் இறுதிச்சடங்கு அரசு மரியாதை இல்லாமல் நடைபெற உள்ளது.
உம்மன் சாண்டி
கேரளா மாநிலம் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி கடந்த 18ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவர் இரண்டு முறை கேரளா முதலமைச்சராக இருந்துள்ளார்.
இவரின் உடலுக்கு ஆயிரக் கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து இவரின் உடல் கோட்டயம் புதுப்பள்ளியில் உள்ள புனித ஜார்ஜ் ஆர்த்தோடாக்ஸ் சர்ச்சில் இன்று 3.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
உம்மன் சாண்டியின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தற்போதைய முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். ஆனால் அரசு மரியாதை வேண்டாம் என்று உம்மன் சாண்டியில் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அரசு மரியாதை வேண்டாம்
அவரின் குடும்பத்தினர் கூறியதாவது "தனக்கு அரசு மரியாதை வேண்டாம் எனவும் மத அடிப்படையிலான சடங்குகள் செய்து தனது இறுதிச்சடங்கை நடத்த வேண்டு என்று உம்மன்சாண்டி விரும்புவதாகவும், இதனை ஏற்கனவே எங்களிடம் கூறியுள்ளார் என்றும் அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவரின் மகன் சாண்டி உம்மன் கூறுகையில் "சாதாரண மனிதராக பிறந்து சாதாரண மனிதராக வாழ்ந்த தலைவருக்கு வழியெங்கும் அன்பான ஆதரவை மக்கள் வழங்குவதை பார்த்தோம். அப்பாவின் ஆசைப்படியே இறுதிச் சடங்கை நடத்த நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.