360 ஆண்டுகளுக்கு மேல் பழனி கோவிலில் இவர்களுக்கே முன்னுரிமை.. யார் தெரியுமா?
கலியுக வரதனாக போற்றக்கூடிய முருகப்பெருமான் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் அதிசயத்தை நிகழ்த்த கூடியவர். இவருக்கு மிகவும் விசேஷ தினமாக தைப்பூச விழா தைமாத பௌர்ணமி உடன் கூடிய பூச நட்சத்திரத்தில் கொண்டாடப்படும்.
இந்த தைப்பூச விழாவை முன்னிட்டு பல பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானுக்கு பாதை யாத்திரை சென்றும் பால்காவடி எடுத்தும் வழிபாடு செய்வார்கள். இதனால் அவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய எல்லா தடைகளும் விலகி முன்னேற்றம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் பழனி முருகப்பெருமானை தங்களுடைய மருமகனாகவும் அவர்களுடைய குல தெய்வமாகவும் கருதி சுமார் 360 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். அதைப்பற்றி பார்ப்போம்.

அதாவது பார்வதி தேவி தங்களுடைய குலத்தில் பிறந்தவர் என்றும் அதன் காரணமாக முருகப்பெருமானை அவர்களுடைய மருமகனாக கருதி முருகப்பெருமானுக்கு சீர் கொண்டு செல்கிறார்கள். இதைவிட முக்கியமாக மலைக்கோவிலில் இரவு தங்கக்கூடிய தனி உரிமை இவர்களுக்கு மட்டுமே உள்ளது என்பது தனிச்சிறப்பு.
அதாவது பொது மக்களுக்கு இரவு நேரங்களில் தங்குவதற்கான அனுமதி கிடையாது. இரவு ஒன்பது மணிக்குள் கோவில் நடை சாற்றப்படும். ஆனால் சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஸ்ரீ பார்வதராஜகுல சமூகத்தினர், அதாவது மீனவ மக்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச விழாவை அடுத்து பல நூற்றாண்டுகளாக தொடரக்கூடிய அவர்களுடைய உரிமையின் காரணமாக இரவில் மலைக்கோவிலில் தங்கி வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் இவர்கள் முருகனை மருமகனாக கருதி சிறப்பு வழிபாடு மற்றும் படி பூஜை செய்யக்கூடிய உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அதைவிட முக்கியமாக இவர்கள் வருடம் தோறும் 20 டன் பஞ்சாமிர்தம் தயாரித்து பரிசக் காவடி எடுத்து வந்தும் வழிபாடு நடத்துகிறார்கள்.
ஒருமுறை பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் தேரோட்டத்தின் பொழுது தேர் ஒரு இடத்தில் நின்று விடுகிறது. எத்தனையோ நபர்கள் வந்து முயற்சித்தும் தேரை நகர்த்த முடியவில்லை. ஆனால் மீனவ சமூகத்தை சேர்ந்த பார்வத ராஜகுலத்தினர் வந்து வடம் பிடித்து இழுக்க தேர் எளிதாக நகர்ந்ததாக சொல்லப்படுகிறது.
அதாவது பழனி முருகன் ஆலயத்தில் யாரும் நகர்த்த முடியாத திருத்தேரை இந்த சமூகத்தினர் வடம் பிடித்து இழுத்து நகர்த்தியது வரலாறுகளில் மிகப்பெரிய சிறப்பை பெற்றுள்ளது. அந்த வகையில் இவர்கள் நடப்பாண்டு பழனி ஆண்டவருக்காக 366 வது பாதை யாத்திரை செல்ல இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.