3 நாட்கள் மட்டும் ஏன் நீட்டிப்பு?...செந்தில் பாலாஜி வழக்கில் ED'யின் திட்டம்
செந்தில் பாலாஜி வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெறும் 3 நாட்கள் மட்டும் ஏன் நீட்டிக்கப்பட்டது தொடர்பான கேள்விகளுக்கு அமலாக்கத்துறை சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி - ED
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட நிலையில், அவர் மீது 3000 பக்க குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த ஆவணங்கள் பற்றிய தகவலை பெற செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணை முதன்மை நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இன்று அவர் காணொளி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்ட போது அவருக்கு மீண்டும் 3 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏன் 3 நாட்கள் நீட்டிப்பு
இந்நிலையில், 3 நாட்கள் மட்டும் ஏன் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது தொடர்பான கேள்விகள் அதிகளவில் எழுந்துள்ளன. அந்த கேள்விகளுக்கு அமலாக்கத்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது, அவருக்கு 14 நாட்களுக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது.
அதாவது இன்று வரை. விசாரணையை முடித்த அமலாக்கத்துறை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் 3000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த போது, அப்போது வாய்தா தேதி ஆகஸ்ட் 28 தேதி வரை என நிர்ணயிக்கப்பட்டது.
வழக்கின் வாய்தா தேதி ஆகஸ்ட் 28 என்பதால் இன்றுடன் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், அது 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று வழக்கின் நகல்கள், குற்றம்சாட்டப்பட்டவருக்கு வழங்கப்படும். அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பின் கோரப்பட்டது போல அவர்களிடத்தில் நகல்கள் வழங்கப்படும்.
விசாரணை துவங்குவதற்கு முன் சில நெறிமுறைகள் இருப்பது போல, குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் வழங்கும் போதும் சில நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும் என அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.