சனாதன சர்ச்சை; அமைச்சர் உதயநிதி தலையை சீவினால் ரூ.1,001 கோடி - விஎச்பி நிர்வாகி கைது!
உதயநிதியின் தலையை சீவி வருவோருக்கு ரூ. 1,001 கோடி வழங்கப்படும் என அறிவித்தவர் கைது.
சனாதன சர்ச்சை
கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசினார். அவரின் பேச்சு இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பாஜகவை சேர்ந்தவர்களும், மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களும் அவரின் பேச்சுக்கு கண்டனங்களும் தெரிவித்து வந்தனர். மேலும், உத்திர பிரதேசத்தை சேர்ந்த சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா என்பவர் சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி தரப்படும் என அறிவித்தார். அது பெரும் சர்ச்சையானது.
உதயநிதி தலைக்கு ரூ.1,001 கோடி
அந்தவகையில் விருதுநகர் மாவட்டம் வீரபாண்டியபுரத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் நகர அமைப்பாளராக பதவி வகித்து வந்த கலையரசன் (47) என்பவர் தன்னுடைய பேஸ்புக் சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில் "தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின் தலையை சீவி வருவோருக்கு ரூ. 1,001 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திமுகவின் தகவல் தொழில் நுட்ப அணியின் சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள வீர சுப்பிரமணியன் என்பவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் அவதூறு கருத்துக்களை பரப்பிய கலையரசன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சாத்தூர் நகர் காவல் துறையினரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் பேரில் கலையரசன் மீது சாத்தூர் நகர் போலீசார் 8 பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து கலையரசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.