மாதம் ரூ.2,500 ஊதியத்திற்கு வீட்டுவேலை பார்த்த பெண் - இன்று எம்எல்ஏ
மாதம் ரூ.2,500 ஊதியத்திற்கு வீட்டு வேலை பார்த்த பெண் தற்போது எம்எல்ஏ ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றும் பாஜக
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 207 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.
இதன் மூலம், 2011 ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தில் நடைபெற்று வந்த திரிணாமுல் காங்கிரஸின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

15 ஆண்டுகளாக முதல்வராக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, போட்டியிட்ட பபானிபூர் தொகுதியில் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியை தழுவியுள்ளார்.
வீட்டு பணிப்பெண் டூ எம்எல்ஏ
இதே போல், ஆஸ்கிராம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கலிதா மஜியும்(Kalita Maji) கவனம் பெற்றுள்ளார்.

குஸ்காரா நகராட்சியைச் சேர்ந்த கலிதா மஜி, அரசியலுக்கு வருவதற்கு முன்னர், மாதம் ரூ.2,500 ஊதியத்திற்கு 4 வீடுகளில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்துள்ளார்.
அதன் பின்னர், 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, திரிணாமூல் காங்கிரஸின் அபதானந்த தண்டரிடம் 11,815 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இருந்தாலும் அவரின் அடித்தட்டு பின்புலம் மக்களிடையே கவனம் பெற்றதால் தற்போது மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது.
இந்த முறை, 1,07,692 வாக்குகளைப் பெற்று, , திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஷ்யாமா பிரசன்ன லோஹரை 12,535 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.