கொரோனா வூகான் ஆய்வகத்திலிருந்து பரவியிருக்க வாய்ப்பில்லை: WHO பரபரப்பு தகவல்
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஓராண்டு ஆன பிறகும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவின் வூகான் மாகாணத்தில் தான் கொரோனா வைரஸ் முதலில் பதிவானது.
அதற்குப் பிறகு தான் உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சீனா கொரோனா பற்றிய உண்மைகளை வெளிப்படையாக சொல்லவில்லை என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. கொரோனா சீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்து பரவியிருக்கக்கூடும் எனவும் சொல்லப்பட்டு வந்தது.
அதே சமயம் உலக சுகாதார நிறுவனம் (WHO) சீனாவுக்கு சாதகமாக செயல்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தது. கொரோனா பரவியது குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தது. நீண்ட காலத்திற்கு பிறகு WHO குழு சீனா சென்று கொரோனா தோற்றம் குறித்து விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடக்கத்தில் சீனா அவர்களுக்கு அனுமதி மறுத்தது.
பின்னர் WHO குழு சீனா சென்று விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி தற்போது கொரோனா வூகான் ஆய்வகத்திலிருந்து பரவியிருக்க வாய்ப்பில்லை என WHO தெரிவித்துள்ளது.
மேலும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியிருக்குமா என்பது பற்றி தொடர்ந்து விசாரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.