மீன் எண்ணெய் மாத்திரை யார் சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?
மீன் எண்ணெய் மாத்திரைகள் இன்று உலக அளவில் அதிகமாக மக்களால் எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு சத்துணவு பொருட்களாக இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் அந்த மாத்திரைகளை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு நன்மை கிடைக்கிறது. மீன் எண்ணெயில் EPA, DHA எனப்படும் மிக முக்கியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
அவை வீக்கத்தை குறைப்பதோடு டிரைகிளிசரைடு எனும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது. மேலும், இந்த மீன் எண்ணெய் மாத்திரையை எல்லோரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
ஒருவருக்கு ரத்தத்தில் டிரைகிளிசரைடு அதிகம் இருப்பது அவர்களுக்கு இதய நோய்களுக்கான முக்கிய அறிகுறியாகும். இவர்கள் எப்பொழுதும் மருத்துவர் கண்காணிப்பில் ஒமேகா 3 மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

அதைப்போல், இதய நோய் உள்ளவர்கள் இதயத் துடிப்பு சீராக இருக்கவும், ரத்த நாளங்களில் வீக்கத்தை குறைக்கவும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கொண்ட மீன் எண்ணெய் மாத்திரையை எடுப்பது உதவியாக இருக்கும். அதேபோல், சிலருக்கு மீன் பிடிக்காது. அவர்களும் ஒமேகா 3 சத்து குறையாமல் இருப்பதற்கு மீன் எண்ணெய் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.
அதேபோல் சர்க்கரை நோய், அதிக உடல் எடையை கொண்டவர்கள், ரத்த அழுத்தம் போன்ற மெட்டபாலிக் சிண்ட்ரோம்' பாதிப்பு உள்ளவர்களும் இதய நோய் வரும் என்ற அபாயம் உள்ளவர்களும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி இந்த மீன் எண்ணெய் மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.
யார் தவிர்க்க வேண்டும்:
ஒரு சிலருக்கு ரத்தத்தை மெலிதாக்கக்கூடிய மருந்து சில இதயம் மருந்துகளை எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் மீன் எண்ணெய் மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது ரத்தக்கசிவு அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

எனவே மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. மேலும், இந்த மீன் எண்ணெய் மாத்திரை எடுத்துக் கொண்டதால் மட்டும் நம்முடைய உடல் ஆரோக்கியம் சீராக அமைந்துவிடும் என்று நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது.
சரியான உணவு உடற்பயிற்சி நல்ல தூக்கம், ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டிற்குள் வைத்தால் மட்டுமே நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு அவை உதவியாக அமையும். அதாவது சரியான பழக்க வழக்கங்களோடு சேர்த்து இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் பொழுது தான் நாம் முழு பலனை அடையலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
இருப்பினும் எந்த ஒரு மாத்திரைகளையும் நாம் எடுத்துக் கொள்ளும் முன்பு சரியான மருத்துவரை அணுகி உடற் பரிசோதனை செய்து பிறகு எடுத்துக் கொண்டால் நிச்சயம் எதிர்காலத்தில் வரக்கூடிய எதிர் வினைகளில் இருந்து நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.