தென்னாப்பிரிக்காவில் இனவெறி கொடூரம்... வெள்ளையின மாணவன் செய்த செயலால் அதிர்ச்சி
தென்னாப்பிரிக்காவில் கறுப்பின மாணவர்களின் உடைமைகளில் வெள்ளை இன மாணவன் ஒருவன் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 15 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் அருகே உள்ள ஸ்டெல்லன்போஷ் பல்கலைக்கழகத்தின் குடியிருப்பில் உள்ள கறுப்பின மாணவர் அறைக்குள் வெள்ளையின மாணவர் நுழைந்ததாக கூறப்படுகிறது. அங்குள்ள கருப்பின மாணவனின் உடைமைகளில் அவர் சிறுநீர் கழித்து அட்டூழியத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைவிட உச்சக்கட்ட அநாகரீகமாக வெள்ளையர்கள் கறுப்பினத்தவர்களிடம் இதைத்தான் செய்வார்கள் என அம்மாணவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட மாணவன் பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தின் உயர் கல்விக்கான குழு இந்த இனவெறி மற்றும் பாகுபாட்டின் வெளிப்பாடான இந்த செயலை கடுமையாக கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.