மத்திய அரசின் நலத் திட்டங்கள்.. செயல்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு
தமிழகத்தில் அனைத்து நலத் திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், மத்திய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்களிப்பு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான நேர்வுகளில், மத்திய அரசின் நிதிப்பங்கு காலாண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. நிதியாண்டின் முடிவுக்குள் மத்திய அரசு ஒதுக்கும் தொகையை மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்குக் குறுகிய காலத்துக்குள் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்னும் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 304 கோடியில், மத்திய அரசின் பங்குத் தொகையான ரூ.184 கோடி இதுவரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் உரிய காலத்தில் வரவு வைக்க இயலவில்லை.
மத்திய அரசு
இன்றைய தேதியில், ஒற்றை ஒருங்கிணைப்பு முகமை கணக்குகளில் உள்ள ரூ. 576.22 கோடியில் இந்த நிதியாண்டு முடிவதற்குள் ரூ.482.80 கோடி பயன்படுத்தப்படும். மீதமுள்ள தொகை மத்திய அரசின் பங்காக அடுத்த நிதியாண்டுக்குக் கொண்டு செல்லப்படும்.
இந்நிலையில், தமிழக அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த ஏதுவாக, மத்திய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்துக்குள் அதாவது அந்தந்த நிதியாண்டுக்குள்ளேயே விடுவிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.