இந்தியாவின் முதல் சாதி அற்ற கிராமம்.., எங்கு இருக்கிறது தெரியுமா?
சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட, தொழில், உணவு மற்றும் திருமண உறவுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு படிநிலை சமூக அமைப்பாகும்.
இது பெரும்பாலும் தெற்காசியாவில், குறிப்பாக இந்து சமூகங்களில் நிலவுகிறது.
சாதி அரசியல் காரணமாக இந்திய சமூகத்தில் பிளவு நிலவி வரும் நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள சவுண்டாலா கிராமம் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
சவுண்டாலா கிராமம் பல ஆண்டுகளாக முற்போக்கு எண்ணங்களுடன் செயல்பட்டு வருகிறது.

குழந்தை திருமணத் தடை, கைம்பெண்களின் மறுமணம், வரதட்சணை எதிர்ப்பு, குடும்ப வன்முறைக்கு எதிரான நடவடிக்கை, பெண் கல்வி ஊக்குவிப்பு, போன்ற பல முன்னோடியான தீர்மானங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.
அஹில்யநகர் மாவட்டத்தின் நெவாசா தாலுகாவில் அமைந்துள்ள சவுண்டாலா கிராமம், பிப்ரவரி 5ஆம் திகதி அன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் "எனது சாதி மனிதநேயம்" என்ற கொள்கையை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
இதன் மூலம் தங்களை சாதி இல்லாத கிராமமாக அறிவித்துள்ள நிலையில் இதற்கு அனைத்து சமூகத்தினரும் ஆதரவு தெரிவித்தனர்.
இனி யாரும் சாதியை பின்பற்றவோ, சாதி அடிப்படையிலான நடைமுறைகளில் ஈடுபடவோ கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.
கிராம மக்கள், "மனிதநேயம் தான் மிகப்பெரிய சாதி மற்றும் மதம்.., அனைவரும் சமம்" என்று தெரிவித்துள்ளனர்.