தமிழகத்தில் சமஸ்கிருத கல்வெட்டியாளருக்கு என்ன வேலை? - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

highcourt Sanskritinscriptionscholor
By Petchi Avudaiappan Aug 09, 2021 01:25 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு நடத்தக்கோரி எழுத்தாளர் எஸ்.காமராஜ், மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் ஆகியோர் உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அடங்கிய அமர்வு இதுதொடர்பான வழக்கில் இதற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசுத்தரப்பில் முழு விபரங்களையும் தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது.

அதேசமயம் மத்திய அரசு அளித்த பதிலில், 1980 ஆம் ஆண்டிலேயே தமிழ் கல்வெட்டியலுக்கான கிளை சென்னையில் அமைக்கப்பட்டதாகவும், 4 தமிழ் கல்வெட்டியலாளர்களில் 2 பேர் சென்னையிலும், 2 பேர் மைசூரிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது சென்னையில் சமஸ்கிருதத்திற்கென கல்வெட்டியலாளர்கள் உள்ளனரா? எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மத்திய அரசுத்தரப்பில் ஒரு சமஸ்கிருத கல்வெட்டியலாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது. இதனைக் குறிப்பிட்டு பேசிய நீதிபதிகள் இந்தியாவில் கண்டறியப்பட்ட 1 லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் மொழிக்கானவை. அப்படி இருக்கையில் தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, 60 ஆயிரம் கல்வெட்டுக்களும் தமிழுக்கானவை எனும் போது அதனை திராவிட மொழி கல்வெட்டுக்கள் என அடையாளப்படுத்துவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினர். இது அரசின் கொள்கை முடிவு என மத்திய அரசு விளக்கமளித்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அரசின் கொள்கை முடிவு என்றாலும் ஒன்றன் அடையாளத்தை மறைக்கும் வகையில் இருத்தல் கூடாது. அனைத்து மொழிகளும் முக்கியமானவை. அதனால் அதன் முக்கியத்துவமும், சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டும் என கூறினர்.

தொடர்ந்து தொல்லியல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட 758 பணியிடங்கள் எந்தெந்த பணிகளுக்கானவை? எந்தெந்த மொழிக்கு எத்தனை இடங்கள்? என்ன பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் விரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவு அதிகாரி ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.