"வாட்ஸ் அப்’ மூலம் இளைஞர்களை குறிவைத்து பல கோடி சம்பாதித்த தம்பதி - விசாரணையில் திடுக்கிடும் தகவல்
கேரள மாநிலம், கன்னூர், முகபிலங்காடு பகுதியை சேர்ந்தவர் அப்சல். இவருடைய மனைவி பல்கிஸ். இவர்கள் இருவரும் போதைப்பொருள்களை பல இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் இவர்களை கையும், களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
பெங்களூருவிலிருந்து கன்னூருக்கு சொகுசு பஸ்சில் கொரியர் நிறுவனத்திலிருந்து போதைப் பொருள் பார்சல் வருமாம். அப்போது, இவர்கள் அந்த பார்சலில் இருக்கும் போதைப் பொருளை எடுத்துக் கொண்டு செல்வார்களாம்.
பிறகு, இந்த தம்பதிகள் வாட்ஸ் அப் மூலம் வாலிபர்களுக்கு வலை விரிப்பார்களாம். மேலும், வாடிக்கையாளர்களிடமிருந்து வாட்ஸ் அப் மூலம் பல ஆர்டர்களை பெற்று விற்பனை செய்து வந்திருக்கிறார்கள்.
இந்த போதைப் பொருள் விற்பனை மூலம் இவர்கள் பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர்.
இதனையடுத்து, அவர்களிடமிருந்த 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தம்பதியை சிறையில் அடைத்துள்ள போலீசார் அவர்களிடம் இது குறித்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.