விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..!
விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன தொடர்பு என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்று தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கத்திற்கு எதிராக வீராங்கனை நித்தியா வழக்கு தொடரந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்த உத்தரவில் சங்கங்களின் நிர்வாகிகளாக அரசியல்வாதிகள்,தொழில்அதிபர்கள்,நியமிக்க கூடாது.
நிதியுதவி வழங்குகிறார்கள் என்ற காரணத்திற்காக அவர்களை நியமிக்க கூடாது என்றும் விளையாட்டு வீரர்களின் மேம்பாடுகளை கருத்தில் கொண்டு அரசு சட்டத்திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும், அவ்வாறு சட்டம் இயற்றும் வரை நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விளையாட்டு சங்கங்களில் நிதியுதவி அளிக்கும் அரசியல்வாதிகள்,
தொழில்அதிபர்களை உறுப்பினராகவோ அல்லது நிர்வாகிகளாகவோ சேர்க்க கூடாது என நீதிபதி விதித்த நிபந்தனையை நீக்க வேண்டும் என மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விளையாட்டு சங்கங்கள் குறித்து தனி நீதிபதி வகுத்த நிபந்தனைகளில் எந்த தவறும் இல்லை.
விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன தொடர்பு என கேள்வி எழுப்பினர். வீரர்களுக்கான வசதிகளை பறித்துச்செல்லவே விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகள் நுழைவதாக தலைமை நீதிபதி அமர்வு குற்றச்சாட்டு.
இதையடுத்து தனி நீதிபதி விதித்த நிபந்தனைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.