தலைமை மாறுமா? என்ன பண்ணும் தேசிய பாஜக தலைமை..? மாறினால் தாக்கம் இருக்குமா..?
மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவார் என பேசப்படும் நிலையில், அவ்வாறு நடந்தேறினால் அது எவ்வாறான மாற்றத்தை தமிழக பாஜக சந்திக்கும் என்ற கேள்விகள் வந்து கொண்டிருக்கின்றன.
அண்ணாமலை
தமிழக பாஜக தற்போது பரபரப்பாக இருக்கும் நிலைக்கு முக்கிய காரணம் அண்ணாமலை எனலாம். பாஜகவின் அரசியல் தமிழகத்தில் எடுபடாது என்று பேசப்பட்டு வரும் நிலையில், வேலூருக்கு பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வந்தபோது கணிசமான கூட்டத்தை கூடியதே அக்கட்சியின் ஒரு வித வளர்ச்சியையே காட்டுகிறது.
பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தமிழகம் வந்திருந்த போது, தமிழகத்தில் பாஜக எங்கிருக்கிறது என்று வினவியதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தாலும், கார், சுவரொட்டிகளில் ஒரு கட்சியின் கொடி மற்றும் சின்னம் போன்றவை இடம்பெரும் என்று கூறினால் கட்சி வளர்கிறது என்று தான் அர்த்தம். அவ்வாறு பார்த்தால் பாஜக ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை பாஜக பெற்றுத்தான் உள்ளது தமிழகத்தில்.
மாற்றம் - ஏமாற்றம்..?
இதில் அண்ணாமலையின் பங்களிப்பு மிக பெரியது எனலாம். அவ்வாறு இருக்க அவர் மாற்றப்படுகிறார் என்றால் அது, பல சூழ்நிலைகளை தமிழக பாஜகவில் ஏற்படுத்தும். தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி, கட்சியை நாள் தோறும் மக்களிடம் பேசும் பொருளாக இருக்கவைத்து வரும் அண்ணாமலையை மாற்றி மற்றொருவரை கொண்டு வந்தால், அவர் அடுத்த சில மாதங்களிலேயே வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சியை சிறப்பாக நெருக்கடிக்களை சந்தித்து வழிநடத்துவாரா? என்பது மிக பெரிய கேள்வி குறியே.
வரும் தேர்தல் பாஜகவிற்கு பெரும் சவால்கள் காத்திருக்கும் நிலையில், அதில் மற்றொரு பிரச்சனையை அக்கட்சியே உருவாக்கி கொள்ளாது என்றாலும், தேசிய தலைமையின் முடிவென்பது அக்கட்சியின் நலனை பொறுத்தே தான் அமையும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பல்வேறு விமர்சனங்கள் பாஜக மீது இருந்தாலும், கட்சியை கடந்த சில ஆண்டுகளில் சரியான கட்டமைப்புகளுடன் வளர்த்து வந்து கொண்டிருக்கிறது என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.