2026-ஐ குறி வைக்கும் விஜய்..!! சாத்தியமாகுமா அரசியல் கனவு..! உண்மையில் வெற்றிடம் உண்டா..?
வரும் சட்டமன்ற தேர்தலை குறித்து வைத்து நடிகர் விஜய் மும்முரமாக இயங்கி வரும் நிலையில், அவரின் அரசியல் வருகை தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கருத்து தற்போது அதிகமாக விவாதிகப்படுகிறது.
விஜய் அரசியல் வருகை
தமிழ் சினிமாவை - தமிழ் நாட்டை கடந்து தென்னிந்தியாவில் பெரிய ஆதிக்கத்தையும், வடஇந்தியாவில் கவனத்தையும் ஈர்த்து வரும் விஜய், வெளிநாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றார். அதற்கு சரியான உதாரணம் அண்மையில் வெளியான லியோ படம். நீண்ட காலமாகவே அரசியல் பேசி வரும் விஜய், அதிரடியாக படங்களிலும் இக்கருத்துக்களை புகுத்தியுள்ளார். அதற்கான விளைவுகளையும் அவர் சந்தித்துள்ளார். தலைவா பட விவகாரம், மெர்சல் பட பிரச்சனை, சர்க்கார் தடங்கல் போன்றவை கூறி தெரியவேண்டியதில்லை.
அரசியல் வருகை குறித்தான நடவடிக்கைகளை கடந்த சில மாதங்களாக மேலும் தீவிரப்படுத்தியுள்ள அவர், நேற்று 2026-இல் காப்பு முக்கியம் பிகிலே என்று கூறியது தான் தற்போது தமிழக அரசியலின் விவாத பொருள். அவ்வளவு பெரிய தாக்கத்தை விஜய் உண்டாக்குவாரா? என்ற கேள்வியும் நாம் மனதில் எழாமல் இல்லை.சினிமா புகழை வைத்து அரசியலில் கால் பதித்த பலரும் பின்னர் தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறியுள்ளதே வரலாறு. ஆனால் அதில் விதிவிலக்கு தமிழகத்தின் எம்.ஜி,.ஆர் மற்றும் ஆந்திரத்தின் என்.டி.ஆர்.
இருவருமே தனி கட்சி துவங்கி தங்களது ஆதிக்கத்தை சினிமாவை தாண்டி அரசியலிலும் காண்பித்தனர். ஆனால் அதன் பின்னர் இரு மாநிலத்திலும் அதே கனவோடு வந்த நடிகர்கள் பலரும் தோல்வியையே சந்தித்துள்ளனர் என்பது தான் உண்மை. இந்நிலையில் தான் ரஜினியும் விலகிய களத்தில், தற்போது விஜய் ஆழம் பற்கவுள்ளார். ரஜினியை குறிப்பிட்டதற்கு ஒரு காரணம் உண்டு. 25 ஆண்டுகளாக தமிழக அரசியலில் நேரடியாக களமிறங்கவில்லை என்றாலும், அவரின் தாக்கம் தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருந்தது.
ஒரு கட்சிக்கு தேவைப்படும் அடிப்படைகளை மெருகேற்றுவதில் தற்போது விஜய் மும்முரம் காட்டி வருகிறார். அதன் வெளிப்பாடு தான், தொழிற்சங்க அணி, மருத்துவர் அணி, வழக்கறிஞர் அணி போன்றவற்றை துவங்கியது எனலாம். விஜய் அரசியலுக்கு வருவார் என்றால் அவர் பெரும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள கூடும்.
மாநிலத்தில் ஆளும் கட்சியான திமுகவை எதிர்த்தே தான் விஜய் களமிறங்கக்கூடும். அப்படியென்றால் அவர் தேசிய கட்சி ஒன்றுடன் இணக்கமான சூழலை உருவாக்கிக்கொள்ள கூடும். அது தான் தற்போதும் பேசப்படுகிறது. இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சியுடன் விஜய் நெருக்கம் கட்டலாம் என நம்பப்படுகிறது என்பதை மீறி அதிகமாக பேசப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்காக வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் கூட பிரச்சாரம் மேற்கொள்வார் என்றும் அரசியல் வல்லுநர்கள் பேசத்துவங்கிவிட்டனர். ஆனால் விஜய் என்ன தாக்கத்தை ஏற்படுத்துவார்?
லட்ச கணக்கில் விஜய்க்கு ரசிகர்கள் உள்ளார்கள். அவர்களில் வெவ்வேறு கட்சிகளில் இருக்கும் நபர்கள் அடங்குவார்கள். அரசியலுக்கு வருவார் என்றால் அவர்களில் கணிசமான எண்ணிக்கையை விஜய் இழக்கக்கூடும். ஆனால், அவரின் ரசிகர்கள் கூட்டம் பார்க்கும் போது, ஒரு கணிசமான வாக்குவங்கியை அவர் பெறக்கூடும். அதிமுக தனது வாக்கை பாஜகவில் இருந்து வெளியேறி மீண்டும் பலப்படுத்திக்கொண்டது என கூறினாலும், சிறுபான்மையினரின் வாக்குகள் எவ்வாறு அமையும் என்பது வரும் நாடாளுமன்ற தேர்தலை வைத்து ஒரு வித முடிவை நாம் பெறமுடியும்.
விஜய் அரசியல் வரும் போது அவர் திமுக அதிமுக இரு கட்சிகள் மீதும் அதிருப்தியில் இருக்கும் வாக்குகளை தான் முதலில் தன் பக்கம் இழுக்கக்கூடும். அதனுடன் அவரின் ரசிகர்களின் வாக்குகள் சேரும் போது, கூட்டணிகள் வாக்குகள் போன்றவை சேரும் போது ஒரு குறிப்பிட்ட வாக்குகளை அவர் அறுவடை செய்யக்கூடும்.
அது எந்த அளவிற்கு இருக்கும், வெற்றியை நோக்கிய பயணமாக மாறுமா? என்பதெல்லாம் விஜய் எடுக்கும் நிலைப்பாடுகள், அரசியல் முன்னெடுப்புகள் போன்றவற்றை வைத்தே அமையும். அதற்கு நாம் 2026 வரை அல்ல அதனை தாண்டியும் காத்திருந்த தான் பதிலை தெரிந்து கொள்ளவேண்டும்.