காதலிக்கு வேறொரு மாப்பிள்ளையுடன் திருமணம் - மணமேடையில் மாப்பிள்ளையை தள்ளிவிட்டு தாலி கட்ட முயன்ற காதலன்
சினிமா பாணியில் காதலிக்கு வேறொரு மாப்பிள்ளையுடன் திருமணம் நடைபெற்ற மண்டபத்திற்கு சென்ற காதலன் கடைசி நேரத்தில் காதலிக்கு தாலி கட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடைசி நேரத்தில் தாலி கட்டிய காதலன்
வடசென்னை நெடுஞ்செழியன் நகர் பகுதியில் வசித்து வரும் ரேவதி என்பவருக்கும் , தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் செய்ய உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து நேதாஜி நகர் பகுதியில் இன்று காலை முருகன் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. அப்போது மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டும் போது அவரை தள்ளிவிட்டு மணமகளின் கழுத்தில் தாலி கட்ட முயன்றுள்ளார் மணமகளின் காதலன் சதீஷ்.
அப்போது மணமகளின் சகோதரன் சதீஷை பிடித்து தர்ம அடி கொடுத்து தாக்கியுள்ளார்.
இதையடுத்து பெண்ணின் வீட்டார் போலீசாருக்கு தகவல் கொடுக்கவே அங்கு வந்த போலீசார் மணமகளின் வீட்டாரிடமும், காதலன் சதீஷ் இடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.