தப்பித்த மகிந்த ராஜபக்ச... மாட்டிக்கொண்ட கோத்தபய... பதவியை ராஜினாமா செய்தால் என்ன நடக்கும்?
இலங்கையில் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்த நிலையில் அனைவரது பார்வையும் அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகுவாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் சாலையில் இறங்கி தீவிரமாக போராடி வருகிறது. இதனால் அங்கு கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் அமைச்சரவை கலைக்கப்பட்டது. ஏற்கனவே அங்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்படாததால் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்ச , பிரதமர் மகிந்த ராஜபக்ச இருவரும் பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டம் செய்தனர். இதன் விளைவு பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார். அதேசமயம் அவரின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கியதால் அங்கு கலவரம் வெடித்தது.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களால் அதிகாலையில் எம்.பி.க்கள் உள்பட 35 அரசியல்வாதிகளின் வீட்டை தீவைத்து கொளுத்தப்பட்டது. இதில் ராஜபக்சவின் பூர்வீக பழைய வீடும் தீக்கிரையானது. இந்தநிலையில் பிரதமர் மாளிகையான அலரியிலிருந்து ராஜபக்ச இன்று அதிகாலை பலத்த பாதுகாப்புடன் வெளியேறினார். தற்போது ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அங்கு அதிபர் - பிரதமர் என்ற நடைமுறையே கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் புதிய பிரதமர் பதவி ஏற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டன. ஆனால் எதிர்க்கட்சிகள் அந்த கோரிக்கையை நிராகரித்தது. மேலும் அதிபரும் பதவி விலக வேண்டும் என்று சிறிசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
காரணம் அதிபரும், பிரதமரும் வேறு வேறு கட்சியை சேர்ந்தவராக இருந்தால் பிரதமரால் சுதந்திரமாக செயல்பட முடியாது. சட்டம் இயற்ற முடியாது என்பதால் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க மறுப்பு தெரிவித்து வருகின்றது. எனவே அதிபரும் அங்கே ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
அவையில் 3ல் இரண்டு பங்கு எம்பிக்கள் சேர்ந்து அதிபரை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். ஆனால் அதிபர் நினைத்தால் நீதிபதிகளை நீக்க முடியும் என்பதால் அதிபரை நீக்குவது அங்கு கடினம். ஒருவேளை அதிபர் தானாக பதவி விலகினால் பொதுத்தேர்தல் நடக்கும். ஆனால் கோத்தபய பலமுறை பதவி விலக மாட்டேன் என்று உறுதியாக கூறியுள்ளார்.
இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. புதிதாக தேர்தல் நடத்த அரசிடம் பணம் இல்லை. அதிபரை நீக்குவதிலும் நிதி சிக்கல், சட்ட சிக்கல், நீதிமன்ற மோதல் உள்ளது. இப்படி பல பிரச்சனைகள் இருக்கிறது. இதனை காரணம் காட்டி அங்கு மொத்தமாக அதிபர் பதவியையே நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதை மொத்தமாக நீக்கிவிட்டு 1978 ஆம் ஆண்டுக்கு முன் இருந்தது போல அதிபர் இல்லாத அரசியலமைப்பை கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.