பிரபல பாடகர் மரணம் : விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை - மம்தா பாணர்ஜி அறிவிப்பு!
பிரபல பாடகரான கிருஷ்ண்க்குமார் குன்னத் என்ற கேகே ஹோட்டலில் தங்கியிருந்தபோது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த கேகே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 மணி நேரத்திற்கு முன்பு கொல்கத்தா ஆடிட்டோரியத்தில் நடந்த இசை நிகழ்ச்சியின் காட்சிகளை பகிர்ந்துள்ளார்.
53 வயதான பாடகர் கேகே தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். தமிழில் மட்டும் இவர் 66-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
அதில் காதல் வளர்த்தேன், அப்படி போடு, காதலிக்கும் ஆசை இல்லை, நினைத்து நினைத்து பார்த்தேன், உயிரின் உயிரே, ஸ்ட்ராபெர்ரி கண்ணே, உள்ளிட்ட பாடல்களும் அடங்கும்.
இந்நிலையில் இவர் கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு பின்னர் தங்கியிருந்த ஹோட்டலின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொல்கத்தாவில் மரணமடைந்த பாடகர் கே.கே.வின் உடலுக்கு, விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி அறிவித்துள்ளார்.
பாடகர் கேகேவின் மறைவுக்கு பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அனுராக் தாக்கூர், கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக், இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், பாடகர்கள் சோனு நிகம், ஸ்ரேயா கோசல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.