காங்கிரசு, பாஜக தமிழ்நாட்டுக்கும், தமிழினத்திற்கும் எதிரிகள்; அதிமுகவின் முடிவை வரவேற்கிறேன் - சீமான்!
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவித்திருக்கும் அதிமுகவின் முடிவை முழுமையாக வரவேற்கிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவித்திருக்கும் அதிமுகவின் முடிவை முழுமையாக வரவேற்கிறேன்.
மிகத் தாமதமான முடிவென்றாலும், சரியானதொரு முடிவு. காங்கிரசு, பாஜக எனும் இரு இந்திய ஒன்றியக் கட்சிகளுமே தமிழ்நாட்டுக்கும், தமிழினத்திற்கும் எதிரிகள்தான். அவை தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை, உணர்வு, உயிர், நிலம், வளம், அதனுடையப் பாதுகாப்பு, எதிர்கால நலவாழ்வு என எல்லாவற்றிற்கும் எதிரானவையே.
பாஜகவுடனான உறவைத் துண்டித்திருக்கும் இந்நிலைப்பாட்டில் அதிமுக இறுதிவரை உறுதியாக இருக்குமானால் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று சீமான் பதிவிட்டுள்ளார்.