முழு ஊரடங்கு எதிரொலி... நடுவானில் திருமணம் செய்து கொண்ட மதுரை மணமக்கள்
கொரோனா ஊரடங்கு எதிரொலியாக மதுரையில் பறக்கும் விமானத்தில் மணமக்கள் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு ஒருவார காலத்திற்கு அமல்படுத்தப்படுகிறது.
இதனால் வரும் நாட்களில் திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் இன்று அவசர அவசரமாக தங்கள் இல்லத் திருமணத்தை நடத்தி முடித்தனர். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பல்வேறு திருமணங்கள் அவசர அவசரமாக மிகக் குறைந்தளவு உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு முறையான அனுமதியுடன் நடைப்பெற்றன.
இந்நிலையில் மதுரையை சேர்ந்த மணமக்கள் மீனாட்சி ராகேஷ் - தீக்ஷனா தம்பதியினர் பறக்கும் விமானத்தில் பயணித்தபடி திருமணம் செய்துள்ளனர். சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த விமானத்தில் வருகை தந்த மணமக்கள் தங்களது உறவினர்கள் முன்னிலையில் இந்து சம்பிராதயபடி மணம் முடித்தனர். இதையடுத்து இருவரும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஆசி பெற்றுகொண்டனர்.
விமான பயணம் என்பதால் அனைவருமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமண வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.