ஹிஜாப் இன்றி வகுப்பிற்கு போக மாட்டோம் - இஸ்லாமிய மாணவிகள் திட்டவட்டம்
ஹிஜாப் அணியாமல் நாங்கள் வகுப்பிற்கு செல்ல மாட்டோம் என்று ஹிஜாப் வழக்கில் மனு தாக்கல் செய்திருந்த கர்நாடகாவை சேர்ந்த இஸ்லாமிய மாணவிகள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் பியு கல்லுாரியில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு சில இந்து மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு பள்ளி மற்றும் கல்லுாரி நிர்வாகம் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள்கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதில் கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஹிஜாப் என்பது அடிப்படை மத உரிமைகளில் சேராது. இது இஸ்லாமில் உள்ள அடிப்படை பழக்க வழக்கங்களில் ஒன்று கிடையாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்து உள்ளது.
இதனிடையே கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியானதும் கர்நாடக மாநிலத்தின் யாதகிரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் தேர்வை புறக்கணித்து ஹிஜாப் அணிந்திருந்த 35 இஸ்லாமிய மாணவிகள் பாதியில் வெளியேறினர்.
இந்த நிலையில்தான் ஹிஜாப் வழக்கில் மனுதாரர்களாக இருந்த இஸ்லாமிய மாணவிகள் மூன்று பேர் தீர்ப்பிற்கு பின் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஹிஜாப் அணியாமல் நாங்கள் வகுப்பிற்கு செல்ல மாட்டோம். எங்கள் மதத்திலும், குரானிலும் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்பதை அவர்களிடம் தெரிவிக்கவே நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.
மேலும் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் நாளை முதல் வகுப்பிற்கு செல்ல மாட்டோம். சொந்த நாடு மூலம் எங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு உள்ளது என அம்மாணவிகள் தெரிவித்துள்ளனர்.