உங்கள் நெருக்கடிகள் எங்களை ஆவேசப்படுத்துமே தவிர அச்சப்படுத்தாது - சீமான் ஆவேசம்!
பாஜக, காங்கிரஸ் நம் மொழிக்காக, உரிமைக்காக நின்றுள்ளார்களா? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் பிரசாரம்
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர் "எவ்வளவு நெருக்கடிகள், அழுத்தங்கள் கொடுத்தாலும் அவர்கள் கொடுக்கும் அழுத்தங்கள் எங்களை ஆவேசப்படுத்தும், அரசியல்ப்படுத்துமே தவிர அச்சப்படுத்தாது. சிதைந்து கொண்டிருக்கும் தமிழ் மொழியை நீட்சித்து எடுக்க வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம்.
சீமான் கேள்வி
பல ஆண்டு காலமாக நம் தாய்மொழி சிதைந்து, அழிந்து கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் சின்னத்தைக் கூட ஒலிவாங்கி என்று கூறினால் மக்களுக்கு புரியாத ஒரு நிலைமை, மைக் என்று சொல்ல வேண்டி உள்ளது.
பாஜக, காங்கிரஸ் நம் மொழிக்காக, உரிமைக்காக நின்றுள்ளார்களா? தாய் மொழியில் வழக்காடும் உரிமை கூட நம் இனத்திற்கு கிடையாது. இலங்கை கடற்படையினர் எத்தனை படகுகளையும், மீனவர்களையும் கைது செய்தார்கள்? அதற்கு ஒரு தீர்வு கொண்டு வந்தது உண்டா? " என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.