காலில் ரத்தம் சொட்ட சொட்ட பேட்டிங் செய்த வாட்சன் - என்றும் நினைவு கூறும் சிஎஸ்கேவின் இறுதி போட்டி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒன்பதாவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சென்னை அணி நான்காவது முறையாக அதை வெல்ல ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு மறக்க முடியாத இறுதிப் போட்டியாக அமைந்த 2019 இறுதிப் போட்டி குறித்து இப்போது பார்க்கலாம்.
வழக்கமாக விளையாட்டுப் போட்டி என்றால் வீரர்கள் வியர்வை சிந்தி விளையாடுவார்கள். ஆனால் 2019 இறுதிப் போட்டியில் சென்னை அணியின் முன்னாள் வீரர் வாட்சன் ரத்தம் சொட்ட சொட்ட விளையாடி இருந்தார். அதனால்தான் அந்த பைனல் நீங்க முடியாத நினைவலைகளாக தொடர்கின்றன. அந்த சீசனில் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை விளையாடியது.
அந்த போட்டியில் மும்பை முதலில் விளையாடி 149 ரன்களை எடுத்திருந்தது. 150 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சென்னை விரட்டியது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய வாட்சன் 59 பந்துகளில் 80 ரன்களை எடுத்திருந்தார். ஆட்டத்தில் டைவ் அடித்த போது காயம் ஏற்பட்டத்தில் இடது கால் மூட்டுப் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. அந்த காயத்திலிருந்து உதிரம் வெளிவந்துக் கொண்டிருக்க போர் குணத்துடன் களத்தில் விளையாடினார் வாட்சன். ஆட்டம் முடிய இரண்டு பந்துகள் மட்டுமே எஞ்சியிருக்க ரன்-அவுட்டாகி வெளியேறினார் அவர்.
அதனால் மும்பை அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை அந்த முறை வென்றிருந்தது. ஆட்டத்திற்கு பிறகு ஆறு தையல் அவரது காயத்திற்கு போடப்பட்டதாக முன்னாள் சென்னை வீரர் ஹர்பஜன் சிங் சொல்லி இருந்தார். முழங்காலில் ரத்தம் வழிய இருக்கும் வாட்சனின் புகைப்படம் அதன்பிறகு பல நாட்களுக்கு வைரலாக பகிரப்பட்டு வந்தது.
2018 முதல் 2020 வரை மூன்று சீசன் சென்னை அணிக்காக விளையாடிய வாட்சன் 1252 ரன்களை எடுத்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ளும் சென்னை அணிக்கு வாழ்த்து சொல்லி உள்ளார் அவர்.
இது சென்னை அணிக்கு சிறப்பான சீசனாக அமைந்துள்ளது. கணக்கை நான்காக உயர்த்துங்கள் என ட்விட்டரில் வாட்சன் தெரிவித்துள்ளார்.