ஆற்றில் திடீர் வெள்ளம்: ரிஷிகங்கா மின்நிலையத்தை காணவில்லை- வெளியான புகைப்படங்கள்
உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் ரிஷிகங்கா மின்நிலையமே முழுமையாக அடித்து செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இமயமலைப்பகுதியில் உள்ள ஜோஷிமடத்தில் நேற்று மிகப்பெரிய அளவில் பனிப்பாறை உடைப்பு ஏற்பட்டு பனிச்சரிவு நிகழ்ந்தது. இதனால், சமோலி மாவட்டத்தில் உள்ள அலாக்நந்தா, ரிஷிகங்கா ஆற்றில் திடீரென கட்டுக்கடங்கா வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதில் ரிஷிகங்கா ஆற்றின் குறுக்கே 13.2 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் ரிஷிகங்கா மின்திட்டம்(தபோவன் அணை) கட்டப்பட்டு வந்தது. இந்த மின்திட்டம் முழுமையாக அடித்து செல்லப்பட்டதாகவும், இங்கு பணியாற்றி வந்த 100க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், சேறுநிரம்பி இருப்பதால், மீட்புப்பணியில் ஈடுபடுவதும் சிக்கலாக மாறியுள்ளது. எனினும் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர், அவர்களுடன் இந்திய திபெத்திய படையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர்,தீயணைப்புத் துறையினர், போலீஸார் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.