தமிழக அரசு பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
தமிழக அரசு பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
வாட்டர் பெல் திட்டம்
மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு நீர் அருந்துவது மிக முக்கியமான ஒன்று. பள்ளிகளில், மாணவ மாணவிகள் போதிய அளவு நீர் அருந்தாமல் இருப்பதால் சோர்வடைகின்றனர்.
மாணவர்கள் கட்டாயம் நீர் அருந்துவதை உறுதிப்படுத்தும் வகையில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வாட்டர் பெல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்திலும் அரசு பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், விரைவில் இது தொடர்பான சுற்றறிக்கை வெளியாகும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, காலை 10.30 மணி, 11.45 மணி, மதியம் 2.30 மணி என்று 3 முறை வாட்டர் பெல் அடிக்கப்படும்.
ஒவ்வொரு முறையும் 5 நிமிடம் ஒதுக்கப்படும். இந்த நேரத்தில் மாணவர்கள் கட்டாயம் நீர் அருந்த வேண்டும்.
மாணவர்கள் வெளியே செல்லாமல், வகுப்பறையில் அமர்ந்தே நீர் அருந்த வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.