ஹைதராபாத் அணி செய்த கொடுமைகள் - மனம் கலங்கிய டேவிட் வார்னர்

ipl2021 SRH david warner ipl2022 sun risers Hyderabad
By Petchi Avudaiappan Jan 07, 2022 07:32 PM GMT
Report

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனக்கு கொடுத்த மிகவும் கொடுமையான வலிகள் குறித்து டேவிட் வார்னர் மனம் திறந்துள்ளார். 

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கென்று இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் அவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு மோசமாக அமைந்தது. ஐபிஎல் தொடரின்  பாதியிலேயே ஹைதராபாத் அணியின் கேப்டன்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர் திடீரென அணியில் இருந்தும் புறக்கணிக்கப்பட்டார்.

குறிப்பாக அவர் களத்திற்கு வெளியில் சோகமாக உட்கார்ந்திருந்த காட்சிகள் இன்னும் ரசிகர்களால் மறக்க முடியாது. இந்நிலையில் ஹைதராபாத் அணியுடனான பிரச்சினை குறித்து வார்னர் முதல் முறையாக பேசியுள்ளார். அதில் நீங்கள் ஒரு கேப்டனை பதவி நீக்கம் செய்கிறீர்கள், அதன் பின்னர் அணிக்குள் கூட சேர்க்கவில்லை. அணிக்காக அவர் என்னவெல்லாம் செய்தார் என்பதை கூட நினைத்துப்பார்க்காமல் இவற்றை செய்தால், அந்த அணி வீரர்களுக்கு நீங்கள் தரும் நம்பிக்கை என்ன?

அணியில் உள்ள மற்ற வீரர்கள் நமக்கும் இதே நிலைமை தான் வரும் போல என்று நினைத்துவிடுவார்கள். இதுதான் எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது.எது எப்படியானலும் நடந்ததை யாராலும் மாற்ற முடியாது. உங்களுக்கு அது குறித்து விவாதம் செய்ய வேண்டும் என்றால் தைரியமாக செய்யுங்கள். அதில் இருந்து ஓட வேண்டாம். நான் ஒன்றும் கடித்துவிட மாட்டேன். நீங்கள் சொல்லும் காரணங்களை அமைதியாக கேட்க மட்டுமே என்னால் முடியும் என ஹைதராபாத் அணியை நோக்கி வார்த்தைகளை விட்டுள்ளார். 

மேலும் ரசிகர்கள் மிகவும் முக்கியமானவர்கள். போட்டியை பார்க்கும் சிறுவர்கள், சச்சின், கோலி, வார்னர், வில்லியம்சன் போன்று ஆக வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். நாங்கள் அந்த அணியில் இல்லையென்று தெரிந்தால் மிகவும் ஏமாற்றமடைவார்கள். அதுதான் என்னை காயமாக்குகிறது என வார்னர் கூறியுள்ளார்.