‘’ கண் திறந்த தேசம் அங்கே , கண் மூடும் தேசம் எங்கே ‘’ - முடியுமா யுத்தம் ? உக்ரைன்-ரஷ்யா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை!
உக்ரைன் ரஷ்யா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கிடையே போரை முடிவுக்கு கொண்டுவர முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்டை நாடான பெலாரஸில் நடைபெற்றது.
சுமார் 3 மணி நேரத்தை கடந்து நீண்ட நேரம் நடந்து பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என ரஷ்யாவும், உக்ரைனும் அறிவித்தன.
இரு தினங்களுக்கு முன்பு ரஷ்ய படைகள் தாக்குதலை குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் தாக்குதலை அதிகரிக்கத் தொடங்கியது.அந்த வகையில், கார்கிவ் நகரில் ரஷ்ய படை ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.
உக்ரைனின் கார்கிவ் நகரில் நேற்று காலை நடந்த குண்டு வீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில்,ரஷ்யா -உக்ரைன் இடையே இன்று மீண்டும் இரண்டாவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையிலாவது இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு போர் முடிவுக்கு வருமா? என சர்வதேச உலக நாடுகள் எதிர்பார்ப்பில் உள்ளன.