புதினுக்கு எதிராக களம் இறங்கிய வாக்னர் ஆயுத குழு - திடீரென பின்வாங்கியதன் காரணம் என்ன?
ரஷ்யாவின் முக்கிய ஆயுத படை தன் நாட்டிற்கு எதிராக திரும்பியது, தற்பொழுது பின்வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்னர் குழு
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடமாக போர் நடந்து வந்தது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட மிக முக்கியமான படை எவ்ஜெனி பிரிகோசின் தலைமையிலான வாக்னரின் கூலிப்படை. இது தற்போது ரஷ்ய நாட்டு ராணுவத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருந்தனர்.
தொடர்ந்து ராணுவத்திற்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர், இது புதினுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதையடுத்து ராணுவத்திற்கு எதிராக, ரஷ்ய நாட்டின் தெற்கு பகுதியில் இருந்த ராணுவ அலுவலகத்தைக் கைப்பற்றினர்.
அப்போது ரஷ்ய அதிபர் புதின் இது குறித்து உரையாற்றுகையில், “ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தி கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் தேசத் துரோகிகள்” எனத் தெரிவித்தார். ஆயுதக் குழுவினரைக் கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழல் நிலவியது.
பின் வாங்கிய குழு
இதனை தொடர்ந்து, ரஷ்யாவில் பெரும் பதற்றம் நிலவியது. மாஸ்கோ நோக்கி வாக்னர் ஆயுதக் குழு முன்னேறுவதைத் தடுக்க ரஷ்ய ராணுவம் சார்பில் பாலங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. பின்னர் போலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுக்கெஸ்கோ, வாக்னர் ஆயுத குழுவின் தலைவர் பிரிகோஜின் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பிறகு வீரர்கள் ரத்தம் சிந்துவதைத் தடுக்க மாஸ்கோ நோக்கிச் செல்வதைக் கைவிடுவதாக பிரிகோஜின் அறிவித்தார். மேலும் பல்வேறு இடங்களில் மக்களின் அன்றாடப் பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் உள்நாட்டில் நிலவும் பதற்றமான சூழலை உலகத் தலைவர்கள் பலரும் கவனித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.