ஒத்துழைக்க மறுக்கும் செந்தில் பாலாஜி - புகார் அளித்த அமலாக்கத்துறை
நடைபெற்ற விசாரணையில் இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி சரியான முறையில் ஒத்துழைக்கவில்லை என அமலாக்கத்துறை புகார் அளித்துள்ளது.
முடிவடைந்த விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்திருந்த நிலையில், 5 நாட்கள் அவரிடம் தீவிர விசாரணையை அமலாக்கத்துறை மேற்கொண்டது. சென்னை சாஸ்திரி பவனில் நடைபெற்ற இந்த விசாரணையில் செந்தில் பாலாஜியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை அமலாக்கத்துறை எழுப்பியதாக கூறப்படுகிறது.
கொடுக்கப்பட்ட அவகாசம் நிறைவுபெற்ற நிலையில், அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, மேலும் விசாரிக்க அவகாசம் கோரியது. ஆனால் அதனை மறுத்த நீதிமன்றம் அவருக்கு வரும் 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்த நிலையில், செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை
அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில், 3000 பக்க குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீது தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள தகவலில், குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் பெரும் ரொக்கம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்து, விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது, செந்தில் பாலாஜி அதை மறுத்து எந்த நம்பத்தகுந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை என்றும் அதற்குப் பதிலாக அவர் விசாரணை நடவடிக்கைகளின் போது ஒத்துழைக்காதவராகவும், ஏய்ப்பவராகவும் உள்ளார் என அமலாக்கத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.