வாக்காளர்கள் கவனத்திற்கு: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு வெளியீடு.!
தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. 234 தொகுதிகளிலும் 3585 ஆண்கள், 411 பெண்கள், மூன்றாம் பாலினம் இரண்டு பேர் என மொத்தம் 3998 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த சூழலில் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில், *வாக்களிக்கச் செல்லும் பொழுது கண்டிப்பாக அனைவரும் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. *சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் *புதிய வாக்காளர் அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும்.
FFG , ZVA போன்ற மூன்று ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கும் வாக்காளர் அட்டை அல்லாதவர்கள் ஆதார் உட்பட 11 இதர அடையாள ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம். *வாக்களிப்பதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்த வேண்டும் *உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின் உங்களுக்கு அளிக்கப்படும் (வலது) கையுறையை அணிந்து கொள்ள வேண்டும்.
*முதலாம் தேர்தல் அலுவலரிடம் உங்களுக்கு வழங்கப்பட்ட பூத் ஸ்லிப்பை காண்பிக்க வேண்டும். அதில் உள்ள பாக எண் உள்ளிட்டவற்றை சரிபார்த்த பின்பு , 17 A ரிஜிஸ்டரில் கையொப்பமிட வேண்டும்.

இதன் பின்னர் உங்களுடைய இடதுகை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்படும். பின்னர் உங்களுக்கு அளிக்கப்படும் Voters Slip ஐ பெற்று கொண்டு அதை 3ஆவது அமர்ந்திருக்கும் தேர்தல் அலுவலரிடம் காண்பித்து உங்கள் வாக்கை செலுத்தலாம். *நீங்கள் வாக்களிக்கும் வேட்பாளர் பட்டனை அழுத்தும் போது உங்களுக்கு பீப் என்ற சத்தமும், அதற்கு பக்கத்தில் சிகப்பு விளக்கு எரிவதையும், அருகிலுள்ள விவிபேட் இயந்திரத்தில் நீங்கள் வாக்களித்த வேட்பாளரின் சின்னமும் 7 வினாடிகள் தோன்றும். அப்போது நீங்கள் வாக்களித்து விட்டீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
*வாக்குச்சாவடியிலிருந்து வெளியே வந்து நீங்கள் அணிந்துள்ள கையுறையை கழற்றி வெளியில் உள்ள குப்பை தொட்டியில் போட்டுவிடுங்கள். *வாக்குச் சாவடிக்குள் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் செல்போன் கொண்டு செல்லலாம். மற்றபடி வாக்காளர்கள், முகவர்கள் உள்ளிட்ட யாரும் செல்போன் கொண்டு செல்ல கூடாது.
முக்கிய குறிப்பு: வாக்களிக்க செல்லும் போது உங்களது உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தாலோ, உங்களுக்கு கொரோனா தொற்று இருந்தாலோ, அல்லது நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலோ நீங்கள் தனியே வந்து மாலை 6.00 மணி முதல் 7.00 மணி முடிய உள்ள நேரத்தில், வாக்கு சாவடியில் கொடுக்கப்படும் கொரோனா கவச உடையை அணிந்து வாக்களிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.