9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் - முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Tngovernment Localbodyelections 1stphaseoflocalbodyelections
By Petchi Avudaiappan Oct 06, 2021 01:45 AM GMT
Report

 தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரு கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு 7,921 வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்த தேர்தலில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர், மாவட்ட பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு என 4 ஓட்டுபோடவேண்டும். இதில் மாவட்ட பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகளில் போட்டியிடுபவர்களுக்கு கட்சி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராம பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு சுயேட்சை சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும்.

மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒருமணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்கான அறிகுறி உள்ளவர்களும் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவை கண்காணிக்க கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இணையதள வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.