மாரியம்மன் கோவில் திருவிழாவில் பிரசாதம் சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி. மயக்கம் - திருவாரூரில் பரபரப்பு சம்பவம்
திருப்பாம்புரம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் பிரசாதம் சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருப்பாம்புரம் பகுதியில் கிராமத்திற்கு சொந்தமான மஹா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத திருவிழா 4 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இக்கோவிலில் அன்னதானம் போடப்பட்டது. நேற்று முன்தினம் போடப்பட்ட அன்னதானத்தை அளவுக்கு அதிகமாக வாங்கி வைத்து, நேற்று அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் பெண்கள் முதியயவர்கள் சாப்பிட்டுள்ளனர். இதனால், இன்று அதிகாலை முதலே 5 சிறுவர்கள் உட்பட 13 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம், பேதி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர்கள் உடனடியாக நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மருத்துவர்கள் திருப்பாம்புரம் பகுதியில் முகாம் அமைத்து மக்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர்.