ஸ்டாலினுக்காக தனது கை விரலை துண்டித்துக் கொண்ட தொண்டர் - நடந்தது என்ன?
திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக வேண்டும் என்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திமுக தொண்டர் ஒருவர் தனது இடது கை சுண்டு விரலை துண்டித்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தில் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிமுகவும், திமுகவுக்கும் இடையில் போட்டி வலுவடைந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக அரியணை ஏற முடியாமல் தவித்து வரும் திமுகவோ இந்த முறை எப்படியாவது முதல்வர் நாற்காலியை கைப்பற்றிவிட வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைன்னில் வசித்து வந்தவர் குருவையா (66). இவர் திமுக தொண்டர் ஆவார்.
ஒவ்வொரு முறையையும் திமுக தேர்தலை சந்திக்கும் போது, இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு குருவையா திமுக வெற்றி பெறவேண்டும் என்று வேண்டிக்கொண்டு கிடா வெட்டி பொங்கல் வைப்பது வழக்கமாக வைத்து வந்துள்ளார். கடந்த 2011 மற்றும் 2016 தேர்தல்களில் திமுக தோல்வி அடைந்துவிட்டது. இது குருவையாவுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்து வந்தது.
இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று குருவையா இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வேண்டிக்கொண்டு, பொங்கல் வைப்பதற்கு பதிலாக தனது இடது கை விரலை துண்டித்து உள்ளார்.

அவர் கை விரலை துண்டித்துக் கொண்டதை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை சேர்த்தனர். உடனடியாக போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற வேண்டும் என்று தனது கை விரலை வெட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.