கொலை முயற்சியில் உயிர் தப்பிய அதிபர் புதின் - அதிர வைக்கும் தகவலால் பரபரப்பு
ரஷ்ய அதிபர் புதினை கொல்ல சதி நடந்ததாக உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் 90 நாட்களுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. இதில் இரு நாடுகளிலும் கணக்கிடமுடியாத அளவுக்கு பொருளாதாரம், உயிர்பலி போன்ற இழப்புகள் நிகழ்ந்துள்ளது.
இதனிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல இரண்டு மாதங்களுக்கு முன் முயற்சி நடந்ததாகவும், அதில் அவர் தப்பித்ததாகவும் உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் கூறியுள்ளார்.
புதின் தற்போது ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது வயிற்றில் இருந்து திரவத்தை அகற்ற சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவின் தலைவர் கைரைலோ புடானோவ் அளித்துள்ள பேட்டியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கு இடையே உள்ள கருங்கடலுக்கும், ரஷியாவின் காஸ்பியன் கடலுக்கும் இடையே உள்ள காகசஸ் என்ற இடத்தில் கொல்ல முயற்சி நடந்தது. பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கிய பின் இந்த முயற்சி நடந்தது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார் என கைரைலோ புடானோவ் தெரிவித்துள்ளார்.