புற்றுநோய் சிகிச்சைக்காக அதிபர் பதவியிலிருந்து புதின் தற்காலிக விலகல்? - வெளியான தகவலால் பரபரப்பு
கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏராளமான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
போரை கைவிடுமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.
உக்ரைன் பகுதியில் அதிக இழப்பை ஏற்படுத்த ரஷ்ய ராணுவம் திட்டமிட்டு போர் தொடுத்து வருகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளை பலாத்காரம் செய்தும் அப்பாவி மக்களை கொன்று குவித்தும் நாசப்படுத்தி வருகின்றனர். உக்ரைனில் அதிகப்படியான மனித சடலங்கள் மீட்கப்பட்டன.
அந்த சடலங்கள் அனைத்தும் கைகள் கட்டப்பட்ட நிலையில், கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, அருகில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், நியுயார்க் போஸ்ட் செய்தியில் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அந்த செய்தியில், ரஷ்ய அதிபர் புதின் புற்றுநோய் சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக தற்காலிகமாக பதவியிலிருந்து விலகுவதாகவும், அந்தப் பொறுப்பை நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலா பருட் ஷேவிடம் பொறுப்பை ஒப்படைக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புற்றுநோய்க்கு உடனடியாக புதினுக்கு அறுவை சிக்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக, ரஷ்யாவின் முன்னாள் வெளியுறவு புலனாய்வு சேவையின் தலைவர் தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்திருப்பதாக மேற்கோள்காட்டி நியுயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து குணமடையும் காலத்தில் புதினுக்கு தற்காலிகமாக உடல் செயலிழப்பு ஏற்படக்கூடும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.